பரமக்குடி: சென்னை துரைப்பாக்கம் ஜெயின் கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற கராத்தே போட்டியில், ஓபன் குமிட்டே பிரிவில் பரமக்குடி ஏ.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி குரு அனுஸ்ரீ கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்றார்.
தேசிய அளவிலான கராத்தே வீராங்கனையான குரு அனுஸ்ரீ, தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று வருகிறார். இந்த வெற்றியின் மூலம் அவர் 34-வது முறையாக பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவி அனுஸ்ரீயின் சாதனையைப் பாராட்டி, பள்ளியின் ஆசிரியர்கள், கராத்தே மாஸ்டர்கள் மற்றும் சக மாணவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும், அவரது எதிர்கால கராத்தே போட்டிகளில் சிறப்பான வெற்றிகளை பெற வேண்டும் என வாழ்த்தினர்.

