சென்னை: சென்னை சிட்கோ 2-வது பிரதான சாலையில் இயங்கி வரும் எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணி உணவகத்தில் வாங்கிய பிரியாணியில் புழு இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
சிட்கோ 2-வது பிரதான சாலையில் உள்ள அந்த உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் பிரியாணி வாங்கி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. அப்போது பிரியாணியில் புழு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக உணவக நிர்வாகத்திடம் இதுகுறித்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், தனது புகாரை உணவக உரிமையாளர் முறையாக கவனிக்கவில்லை என்றும், உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததாகவும் அந்த வாடிக்கையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையடுத்து, சம்பவம் தொடர்பாக போலீசாரிடமும் புகார் அளித்ததாகவும், ஆனால் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
உணவகங்களில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு, புகார் உண்மையாக இருப்பின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஆய்வு நடத்தி, உணவின் தரம் மற்றும் சுகாதார நிலையை பரிசோதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
பிரியாணியில் புழு இருந்ததாக எழுந்துள்ள இந்த புகார் குறித்து உணவக நிர்வாகத்தின் விளக்கம் என்ன? அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்பது கேள்வியாக உள்ளது.

