சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில், எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரையிலான பக்கிங்ஹாம் கால்வாயில் ‘வாட்டர் மெட்ரோ’ எனப்படும் நீர்வழிப் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், மாற்று போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
இதற்காக, திட்டத்தின் சாத்தியக்கூறுகள், தொழில்நுட்ப அம்சங்கள், நீர்வழிப் பாதையின் நிலை, பயணிகள் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து விரிவான சாத்தியக்கூறு அறிக்கை (Feasibility Study Report) மற்றும் விரிவான திட்ட அறிக்கை (Detailed Project Report – DPR) தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.
எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரை பக்கிங்ஹாம் கால்வாயை பயன்படுத்தி நீர்வழிப் போக்குவரத்து ஏற்படுத்தப்பட்டால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கிடையேயான போக்குவரத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திட்டத்தின் சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்ட பின்னர், திட்டத்தின் செயல்படுத்தும் முறை, செலவு, வழித்தடங்கள் மற்றும் பிற முக்கிய அம்சங்கள் குறித்து தெளிவான விவரங்கள் வெளியாகும்.

