சென்னை, ஜூன். 5 –
தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வாக, புதிய அரசியல் இயக்கத்தை அறிவித்த கையோடு, டிஜிட்டல் முறையில் தமக்கான ஆதரவைத் திரட்டும் அதிரடிப் பணிகளில் அண்ணாமலை களமிறங்கியுள்ளார். இதற்காக பிரத்யேக இணையதளம் ஒன்றும் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், சமூக மாற்றத்திற்காகவும் புதிய பாதையில் பயணிக்கப் போவதாக அண்மையில் அண்ணாமலை அறிவித்திருந்தார். இந்த புதிய அரசியல் இயக்கத்திற்கான அடித்தளத்தை வலுப்படுத்தும் நோக்கில், தற்போது தொழில்நுட்பப் புரட்சியை அவர் கையில் எடுத்துள்ளார்.
இணையதள முகவரி:
பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் தங்களின் ஆதரவை பதிவு செய்ய WETHELEADER.ORG என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பாரம்பரிய அரசியல் பிரச்சார முறைகளைத் தாண்டி, நேரடியாக அடித்தட்டு மக்களையும், படித்த இளைஞர்களையும் டிஜிட்டல் தொழில்நுட்பம் வாயிலாக ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
“என் கட்சியில் இணைய விரும்புபவர்கள் மற்றும் சமூக மாற்றத்தை விரும்பும் தொண்டர்கள் அனைவரும் உடனடியாக இந்த ‘We The Leaders’ வெப்சைட்டில் தங்களது விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்” என்று அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த இணையதளத்தில், சமூக மாற்றத்திற்கான உள்ளூர் காரணங்கள், கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இளைஞர் மேம்பாடு போன்ற பல்வேறு தளங்களில் ஒன்றிணைந்து செயல்பட விரும்புவோருக்கு தனித்தனிப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
புதிய இயக்கம் தொடங்கப்பட்ட மிகக் குறுகிய காலத்திலேயே, லட்சக்கணக்கான இளைஞர்கள் இந்த டிஜிட்டல் தளம் வழியாக தங்களை இணைத்துக் கொள்ள ஆர்வம் காட்டி வருவதாக அண்ணாமலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியல் களத்தில் இந்த டிஜிட்டல் ஆதரவுத் திரட்டு முறை தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

