திருப்பூர்: தாராபுரம் ஐகோர்ட் வழக்கறிஞர் முருகானந்தம் கொலை வழக்கில் புகார்தாரரும் முக்கிய அரசு சாட்சியுமான தங்கவேலை கொலை செய்ய முயன்ற வழக்கில், உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு போலீஸ் படை எஸ்.ஐ. சரவணன் (52) கைது செய்யப்பட்டார்.
கடந்த 7-ஆம் தேதி டூவீலரில் சென்ற தங்கவேலை காரில் வந்த மர்மநபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே நந்தகுமார், பாபு, சரஸ்வதி, ஹேமா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பாளையங்கோட்டை சிறையில் இருந்தபோது தண்டபாணியுடன் ஏற்பட்ட பழக்கத்தின் அடிப்படையில் அரசு சாட்சியை கொலை செய்ய சதி திட்டத்தில் சரவணன் உடந்தையாக இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள கூலிப்படையினரை பிடிக்க 6 தனிப்படை போலீசார் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

