சென்னை: அரசு அலுவலகங்களில் சீருடை அணியாமல் பணியாற்றும் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் பணிநேரத்தில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கட்டாயமாக அணிய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு அலுவலகங்களுக்கு பல்வேறு பணிகளுக்காக தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில், அங்கு பணியாற்றுபவர்களில் யார் அதிகாரி, யார் ஊழியர், யார் பயனாளர் என்பதை எளிதில் கண்டறிய முடியாத சூழல் நிலவுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் தங்களது மனுக்கள், புகார்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியை அணுகுவதில் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அரசு பணியாளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்கும் நடைமுறைகள் ஏற்கனவே பல துறைகளில் உள்ள நிலையில், அந்த அடையாள அட்டையை பணிநேரத்தில் வெளிப்படையாக அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த நிர்வாக உத்தரவுகளில் பணியாளர்களின் அடையாள அட்டை தொடர்பான நடைமுறைகள் இடம்பெற்றுள்ள நிலையில், அவை முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை துறைத் தலைவர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. குறிப்பாக, சீருடை அணியாத அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பெயர், பதவி, புகைப்படம், பணியாளர் எண் மற்றும் துறை உள்ளிட்ட விவரங்களுடன் கூடிய அடையாள அட்டையை பொதுமக்களுக்கு தெளிவாகத் தெரியும் வகையில் அணிந்திருக்க வேண்டும் என்றும், ஒப்பந்த ஊழியர்களுக்கும் தனித்த அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அடையாள அட்டை அணியாமல் பணியாற்றும் ஊழியர்கள் மீது உரிய துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், அரசு அலுவலகங்களில் அடையாள அட்டை அணிவதை கண்காணிக்கவும் அரசு உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு அலுவலகங்கள் என்பது பொதுமக்களின் வரிப்பணத்தில் இயங்கும் பொது நிறுவனங்கள் என்பதால், அங்கு பணியாற்றும் ஒவ்வொருவரின் அடையாளமும் பொறுப்பும் வெளிப்படையாக இருப்பது நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர். “யார் அதிகாரி என்பதை தெரிந்து கொள்வது பொதுமக்களின் உரிமை; தங்களது அடையாளத்தை வெளிப்படுத்துவது அரசு பணியாளர்களின் பொறுப்பு” என்பதால், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் அடையாள அட்டை அணிவதை கட்டாயப்படுத்தி, அதனை கடுமையாக நடைமுறைப்படுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

