சென்னை, ஜூலை 18: சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே இன்று நிகழ்ந்த கோர சாலை விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற தாயும், 6 மாத பெண் குழந்தையும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நித்தியானந்தம் (36), அவரது மனைவி ஷர்மிளா (28) மற்றும் 6 மாத மகள் பிரதிக்ஷாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கண்டெய்னர் லாரி பைக் மீது மோதியதாக கூறப்படுகிறது.
இந்த கோர விபத்தில், ஷர்மிளாவும், 6 மாத குழந்தையான பிரதிக்ஷாவும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கணவன் நித்தியானந்தம் சிறு காயங்களுடன் உயிர் தப்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கணவன் கண்முன்னே மனைவியும், 6 மாத மகளும் உயிரிழந்த இந்த சோக சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்தை ஏற்படுத்திய கண்டெய்னர் லாரி ஓட்டுநரை கைது செய்த போலீசார், அவரது ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்து, விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

