திருவொற்றியூர்:
முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருவொற்றியூரில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருவொற்றியூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர் மற்றும் முன்னாள் மாநகராட்சி 5-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கே.பி. சொக்கலிங்கம் ஆகியோர், தி.மு.க. நிர்வாகிகளுடன் இணைந்து கே.வி.கே. குப்பம், விம்கோ நகர் மற்றும் சத்தியமூர்த்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கலைஞரின் திருஉருவப் படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு பிரியாணி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, வடகிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் கிழக்கு பகுதி தி.மு.க. சார்பில் திருவொற்றியூர் தேரடி பகுதியில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஆயிரம் பேருக்கு அறுசுவை பிரியாணி வழங்கும் விழா நடைபெற்றது. பகுதி செயலாளரும் மண்டலக் குழுத் தலைவருமான திமு தனியரசு ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் கலந்து கொண்டு கழக இருவண்ணக் கொடியை ஏற்றி வைத்து, கலைஞரின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் குறிஞ்சி கணேசன், பகுதி அவைத்தலைவர் ஆசைத்தம்பி, பகுதி நிர்வாகிகள் எம்.வி. குமார், குமரேசன், தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட மாவட்ட, பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

