பழனி, மே 28:
புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு வந்த பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் பழனி தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜகோபால் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலையத்திற்கு, ஒரு பெண் தனது பிரச்சினை தொடர்பாக புகார் அளிக்க வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரிடம் விசாரணை மேற்கொண்ட உதவி ஆய்வாளர் ராஜகோபால், பின்னர் அந்த பெண்ணின் செல்போன் எண்ணுக்கு ஆபாச மற்றும் ஒழுங்குக்கு முரணான குறுஞ்செய்திகள் அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் உயர் காவல் அதிகாரிகளிடம் புகார் அளித்ததாக தெரிகிறது. புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் இருப்பதாக தெரியவந்ததை தொடர்ந்து, உதவி ஆய்வாளர் ராஜகோபாலை மாவட்ட காவல் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
இந்த சம்பவம் காவல் துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

