சென்னை அம்பத்தூர் அடுத்த ஒரகடம் எம்.ஜி.ஆர். தெருவில் உள்ள ஒரு வீட்டில், கடந்த 29-ஆம் தேதி பட்டப்பகலில் மர்ம நபர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து, பூஜை அறையில் இருந்த 5 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றார்.
இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, பொத்தேரியைச் சேர்ந்த விஷ்ணு என்பவர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே செல்வது பதிவாகியிருந்தது.
மேலும், அம்பத்தூர் மற்றும் அயப்பாக்கம் பகுதிகளிலும் நடந்த திருட்டு சம்பவங்களில் விஷ்ணுவுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் விஷ்ணுவை கைது செய்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

