சென்னை: மணலி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் காவலர் ஒருவர், சரித்திர பதிவேடு குற்றவாளியால் நகை, பணம் மற்றும் கார் உள்ளிட்டவற்றை இழந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
2024ஆம் ஆண்டு பணியின் போது, வழக்கு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு வந்த சென்னை திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி “அப்பு” எனப்படும் சிவராமன் என்பவருடன் பெண் காவலருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது நெருக்கமாகி காதலாக மாறியதாக கூறப்படுகிறது.
சிவராமனுக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், அவர் பெண் காவலரிடம் ஆசை வார்த்தைகள் கூறி சுமார் 97 சவரன் தங்க நகைகள், வைர நகைகள் மற்றும் கார் உள்ளிட்டவற்றை பெற்றதாக கூறப்படுகிறது.
பல மாதங்கள் கழித்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் காவலர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் புகார் ஏற்கப்படாததால் அவர் நீதிமன்றத்தை அணுகியதாக தெரிவிக்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவின் பேரில் ராயபுரம் காவல் நிலைய போலீசார் சிவராமன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சிவராமனின் மனைவி மற்றும் தாயார் உள்ளிட்ட குடும்பத்தினரின் பங்கும் இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் காவல் துறையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

