சென்னை, மே 26:
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பவர் ஹவுஸ் பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன் என்பவர் பிளம்பர் தொழில் செய்து வருகிறார். இவர் தனது மகனின் பள்ளி கட்டணத்திற்காக வைத்திருந்த ரூ.31,200/- பணத்தை தவறவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த வெங்கடேசன், உடனடியாக ஆர்.கே.நகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து உதவி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் ஆலோசனையின் பேரில் காவலர் இருளப்பன் சம்பவம் நடந்த பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்தார். அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தவறவிடப்பட்ட ரூ.31,200/- பணம் 24 மணி நேரத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் மீட்கப்பட்ட பணம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து குற்றப்பிரிவு ஆய்வாளர் கண்ணன் (பொறுப்பு) உரியவரான வெங்கடேசனிடம் பணத்தை ஒப்படைத்தார்.
காவல்துறையினரின் விரைவான நடவடிக்கை மற்றும் நேர்மையான பணிசெயலை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.

