ராமநாதபுரம், மார்ச் 9:
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி பகுதியில் மத்திய அரசின் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல (CRZ) விதிகளை மீறி அமைக்கப்பட உள்ள “போக்குவரத்து பிளாசா” (Transport Plaza) திட்டத்திற்கு எதிராக, அப்பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திட்டத்தை உடனடியாக கைவிடக் கோரி இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர்கள் ஆட்சேபனை மனு அளித்தனர்.
திட்டத்தின் பின்னணி
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி சர்வே எண் 1154 (பகுதி) நிலத்தில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) சார்பில் சுற்றுலாப் பயணிகளுக்காக “போக்குவரத்து பிளாசா” அமைப்பதற்கான முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆனால், இந்தத் திட்டம் கடலோரச் சூழலையும் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும் என போராட்டக் குழுவினர் குற்றம் சாட்டுகின்றனர்.
மீனவர்கள் முன்வைக்கும் காரணங்கள்
மத்திய அரசின் CRZ 2011 விதிகளின்படி, கடற்கரைச் சூழலையும் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதே சட்டத்தின் நோக்கம். ஆனால் இத்திட்டம் CRZ-IB மற்றும் CRZ-II மண்டலங்களில் அமைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
CRZ-II விதிகளின்படி, ஏற்கனவே உள்ள சாலைக்கு நிலம் நோக்கிய பகுதியில் மட்டுமே கட்டுமானம் செய்ய அனுமதி உள்ளது. ஆனால் தனுஷ்கோடியில் சாலையின் இருபுறமும் கடல் மட்டுமே உள்ளதால் இத்திட்டம் சட்டவிரோதம் என மீனவர்கள் வாதிடுகின்றனர்.
மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட TN-41 வரைபடத்தில் இப்பகுதி “மீனவர் குடியிருப்பு பகுதி” என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பகுதியை வாகன நிறுத்துமிடமாக மாற்றுவது மக்களின் வாழ்வுரிமையை பாதிக்கும் செயலாகும் என கூறப்படுகிறது.
பெரிய கட்டுமானங்கள் கடல் அரிப்பை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மேலும், மீனவர்கள் படகுகளை நிறுத்தவும், வலைகளைப் பழுதுபார்க்கவும் பயன்படுத்தி வரும் இடங்கள் இத்திட்டத்தால் பாதிக்கப்படும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை
மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், சுற்றுச்சூழல் விதிகளை மீறி செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தை மாவட்ட நிர்வாகம் உடனடியாக நிறுத்த வேண்டும். சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளை சுற்றுச்சூழல் விதிகளுக்கு உட்பட்ட மாற்று இடங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அடுத்த கட்டமாக தீவிர போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் தனுஷ்கோடி பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.
— ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர்
M.N. அன்வர் அலி

