திருச்சிராப்பள்ளி நீதிமன்றம் எம்.ஜி.ஆர், சிலை நடை பாதை நடைப்பயிற்சியாளர்கள் அமைப்பு சார்பில். இந்தியாவின் 76 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் தன்னார்வ செயற்பாட்டாளர்கள் கெளரவிக்கப்பட்டனர்.
திருச்சிராப்பள்ளி நீதிமன்றம் எம்.ஜி.ஆர், சிலை நடை பாதை நடைப்பயிற்சியாளர்கள் அமைப்பு தலைவர் சீனிவாசன்,
அவைத்தலைவர் லட்சுமிநரசிம்மன், துணைத் தலைவர் ரவி, செயலர் ஷேக் தாவூத், சுந்தர்ராஜன் உட்பட பலர் முன்னிலையில், மயான பூமியில் மனைவி, மகளுடன் உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் சமூக செயற்பாட்டாளர்கள் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், கீர்த்தனா உள்ளிட்டோரை பாராட்டி
சிறந்த சமூக ஆர்வலர்கள் விருது கேடயம் வழங்கப்பட்டது.
இது குறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில், திருச்சியில் மயான பூமியில் மனைவி, மகளுடன் உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை பிரேதங்களை நல்லடக்கம் செய்து வருகிறோம்.
மரணமானது துயரத்தின் உச்சம் ஆகும். இறந்தவரின் உடலை அவரின் சொந்த இருப்பிடத்துக்கோ, வீட்டுக்கோ, நெருக்கமானவர்களிருக்கோ ஊருக்கோ, உறவினர்க்கோ தகவல் கொடுக்க முடியாமல் உரிமை கோரப்படாத உடல்கள் ஏராளம்.
இப்படி உரிமை கோரப்படாத உடலை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வருகிறோம். மரணம் ஒன்று தான்.
சம்பவங்கள் பல. இதன் வலியும் வேதனையும் வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. விபத்தில் பலியாகி மூட்டையாய் வந்ததும் உண்டு. ஆற்று மதகில் ஊறிய நிலையில் கிடந்த உடலும் உண்டு. பிச்சை எடுத்து ஜீவனம் நடத்திய இருபாலரும் பேருந்து நிறுத்தத்திலோ, சாலை ஓரத்திலோ இறந்தவர்களும் உண்டு.
அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துவிட்டு சென்றவர்களும் உண்டு. சாலை விபத்தில், ரயில் இருப்புப் பாதையில் விபத்தில் இறந்தவர்களும் உண்டு.
புராண, இதிகாச காலம் தொட்டு மயானங்களில் இந்து மதத்தில் பெண்களுக்கு அனுமதி இல்லை என்ற நிலை இன்றளவும் தொடர்ந்து வருகிறது.
ஒரு வீட்டில் இறப்பு ஏற்பட்டால் சுடுகாட்டில் அல்லது உடலை புதைக்கும் இடுகாட்டில் ஆண்கள் தான் இறுதி காரியங்களை செய்து வருவார்கள். பெண்கள் வீட்டில் காரியங்களை செய்வதோடு சரி. சுடுகாட்டில், மயானத்தில் காரியங்கள் செய்வதற்கு பெண்கள் அனுமதிக்கப் படுவதில்லை. உயிருக்கு உயிராக நேசித்த கணவர் அல்லது பிள்ளைகள் அல்லது நெருங்கிய உறவினர்களின் உடலுக்குக்கூட அந்த இடத்தில் இறுதியாக முகத்தை கூட பார்க்க அனுமதிக்கப்படாத இந்த உலகில் ஆதரவற்ற அனாதை பிரேதங்களை அடக்கம் செய்து வருகிறோம்.
மனைவி வழக்கறிஞர் சித்ரா, மகள் கீர்த்தனா வழக்கறிஞர் பட்டப்படிப்பினை படித்து வருகிறார். உலகம் எவ்வளவோ முன்னேறினாலும் வறுமை மாறாமல் தொடா்கிறது.
கொடிது கொடிது வறுமை கொடிது வறுமையின் விளைவை களப் பணியால் அறிந்து அதற்குண்டான அணுகு முறை கொள்கையுடன் தினசரி உணவகங்களில் உபரியாகும் உணவினை பெற்று வறியவர்களுக்கும் எளியவர்களுக்கும் ஆண்டு தோறும் உணவளித்து வருகிறோம். வறுமையை உணா்வுப்பூா்வமாக கள ஆய்வில் கண்டுள்ளோம்.
ஏழ்மையான பொருளாதாரத்தாலோ முதுமை மற்றும் நோயின் அடிப்படையில் காக்கப்பட வேண்டியவர்களால் கைவிடப்பட்டு சாலையோரங்களிலேயே உண்டு உறங்கி கையேந்தி பிச்சை எடுத்து ஜீவனம் நடத்தி மருத்துவ சிகிச்சை இன்றி உடல் நலம் குன்றி குற்றுயிராக உருக்குலைந்து அழுக்கு படிந்த உடல், ஏக்கம் நிறைந்த கண்கள், கறை படிந்த பற்கள், கிழிந்த உடையுடன் சாலை ஓரங்களிலேயே இறந்து போய் விடுகிறார்கள். இவர்கள் போதிய பண வசதி இல்லாமல் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு மன அழுத்தத்துடன் வாழ்ந்து வருவது எங்களது ஆய்வில் தெரிகிறது.
உற்றார் உறவினர் சகோதர சகோதரிகள் உதாசீனத்தால் உறவின்றி பொது மக்களிடம் கையேந்தி வாழ்க்கையினை நடத்துகின்றனர். பல ஏளனத்திற்கு ஆளானவர்கள் படும் கோபம், வேதனை, துக்கம், துயரத்தால் இவர்கள் நிம்மதியாக தூங்கவோ, வேலை செய்யவோ அல்லது சாப்பிடவோ முடிவதில்லை.
இவர்களது வேதனைக்கு முக்கியக் காரணியாய் அமைவது உடல்நலக் குறைவும் முதுமையும் தான். மிகவும் ஏழ்மையான வர்க்கத்தைச் சோ்ந்தவர்கள். சாப்பிடுவதை குறைத்தும், ஒரு வேளை சாப்பிடுவதை முற்றிலும் தவிா்த்தும் உள்ளனர். இதனால் இவர்களின் மகிழ்ச்சியும் காற்றோடு கலந்து விடுகிறது. ஏன் அடிப்படை உரிமைகளான வீட்டை இழந்து குடும்பத்தை மறந்து தங்களின் சமூகப் பிணைப்பில் இருந்து விலகி ஒரு நிலையற்ற வாழ்வை வாழ்கின்றனர்.
இப்படி வறுமையில் வாழும் அவா்களின் துன்பங்களும் துயரங்களும் குறித்து சொல்லப்படாதவை ஏராளம். எப்படி இருப்பினும் இன்னும் வறுமை தீர்ந்தபாடில்லை தொடர்கிறது.
ஆதரவற்ற அனாதை பிரேத நல்லடக்க பணியினை கணவன், மகளுடன் செய்யும் போது பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். என்னைப் பொறுத்தவரை இது ஒரு புனிதப் பணியாக நான் கருதுகிறேன்.
இவர்களுக்கு மரியாதை செய்ய ஆளில்லை, மலர்மாலை அணிவிக்க யாருமில்லை, இறுதி ஊர்வலத்திற்கு யாருமில்லை, பிரேதத்திற்கு வாய்க்கு அரிசி போட ஆளில்லை.
பெயர் விலாசம் தெரியாத இறந்த நபருக்கு ஒரு மகன், ஒரு மகள், ஒரு பேத்தி முன்னிருந்து செய்யக்கூடிய இறுதி மரியாதையை நாங்கள் குடும்பத்தோடு செய்கிறோம்.
கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த போது பல உரிமை கோரப்படாத உடல்களை நல்லடக்கம் செய்துள்ளோம். என் வாழ்நாளிற்கு பிறகு படமாய் இருப்பதைவிட பாடமாய் இருப்போம். கி.ஆ.பெ.விஸ்வநாதன் மருத்துவ கல்லூரியில் உடலை தானமாக வழங்க பதிவு செய்துள்ளேன். மனைவியும், மகளும் இயன்ற அளவு விடுமுறை நாட்களில் நல்லடக்க பணியில் ஈடுபடுவார்கள்.
என்றார்.
முன்னதாக சுந்தர்ராஜன் வரவேற்க, நிறைவாக முருகேசன் நன்றி கூறினார். திருச்சிராப்பள்ளி நீதிமன்றம் எம்.ஜி.ஆர், சிலை நடைபாதை நடைப்பயிற்சியாளர்கள் அமைப்பு நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.