திருப்பதி, ஜூன் 16: தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சந்தீப் (46) தனது பெயரில் ரூ.2 கோடி காப்பீடு எடுத்திருந்தார். கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், காப்பீட்டு தொகையை கைப்பற்றும் நோக்கில் அவரது மனைவி சுமா மற்றும் அவரது கள்ளக்காதலன் புண்டலிகா டோம் பர் ஆகியோர் இணைந்து திட்டமிட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சந்தீப்புக்கு விஷம் கலந்த ஊசியை செலுத்தியதால் அவர் உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கணவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக உறவினர்களை நம்ப வைத்த சுமா, பின்னர் காப்பீட்டு தொகையை பெற போலி ஆவணங்களை தயாரித்து விண்ணப்பித்துள்ளார். இதுகுறித்து சந்தேகமடைந்த சந்தீப்பின் சகோதரி போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், காப்பீட்டு தொகைக்காக கணவரை கொலை செய்தது சுமா ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சுமா, அவரது கள்ளக்காதலன் மற்றும் போலி ஆவணங்கள் தயாரிக்க உதவியவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

