சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மின் பெட்டிகள் மற்றும் மின் இணைப்பு வயர்கள் முறையான பராமரிப்பின்றி ஆபத்தான நிலையில் காட்சியளிப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
பல இடங்களில் மின் பெட்டிகள் வெளிப்புறத்தில் சேதமடைந்த நிலையிலும், அதனைச் சுற்றியுள்ள மின் வயர்கள் ஒழுங்கற்ற முறையில் தொங்கியபடியும் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, மழைக்காலம் நெருங்கி வரும் நிலையில் மின் கசிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கக்கூடும் என்றும், இதனால் பொதுமக்கள் மற்றும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகலாம் என்றும் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
“உயிரிழப்பு அல்லது பெரிய விபத்து ஏற்பட்ட பிறகு நடவடிக்கை எடுப்பதைவிட, முன்கூட்டியே ஆபத்தான மின் இணைப்புகளை ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும்” என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள ஆபத்தான நிலையில் காணப்படும் மின் பெட்டிகள் மற்றும் ஒழுங்கற்ற மின் வயர்களை மின்வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, அவற்றை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
மழைக்காலங்களில் மின் கசிவு ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படும் முன்பே அரசு, மின்வாரிய அதிகாரிகள் மற்றும் மின் ஊழியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

