சென்னை: கொடுங்கையூர் தொகுதிக்குட்பட்ட ராஜரத்தினம் நகர் பகுதியில் மின்சார பெட்டிகள் முறையாக பராமரிக்கப்படாமல் சேதமடைந்த நிலையில் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பல இடங்களில் மின்சார பெட்டிகள் அலங்கோலமாகவும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் காணப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக மழைக்காலங்களில் மின்சார பெட்டிகளைச் சுற்றி தண்ணீர் தேங்கினால் மின்கசிவு ஏற்பட்டு விபத்துகள் நேரிடும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பகுதியில் தினசரி ஏராளமான பொதுமக்கள் நடமாடி வரும் நிலையில், மின்சார பெட்டிகளின் தற்போதைய நிலை தொடர்ந்து நீடித்தால் எதிர்பாராத உயிரிழப்பு அல்லது மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே, உயிர்ச் சேதம் ஏற்படும் முன்பாக ராஜரத்தினம் நகர் பகுதியில் உள்ள அனைத்து மின்சார பெட்டிகளையும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பழுதடைந்த பெட்டிகளை சீரமைத்து, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக மின்வாரியத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மின்வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமா? என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


