திண்டுக்கல் பைபாஸ் சாலையில் மனமகிழ் மன்றம் நடத்தும் உரிமையாளரிடம் ரூ.7 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் (32) லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
மனமகிழ் மன்றத்தில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக கூறி, மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கோரியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உரிமையாளர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ரசாயன பவுடர் தடவிய ரூ.7 ஆயிரம் வழங்கப்பட்டபோது, மறைந்திருந்த போலீசார் கலையரசனை பிடித்தனர்.
அப்போது தடயத்தை அழிக்க முயன்ற கலையரசன் கண்ணாடி பாட்டிலை உடைத்து கைகளில் கீறியதால் பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்த அவருக்கும், போலீஸ் அதிகாரிக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து கலையரசன் மீது வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

