ராமநாதபுரம்:
தமிழ்நாடு பட்டங்கட்டி கடையர் பேரவை சார்பாக, சமுதாயத்தினர் சாதி சான்றிதழ் பெறுவதில் எதிர்கொள்ளும் சிரமங்களை தீர்க்க தமிழக முதல்வரை நேரில் சந்தித்து பேச அனுமதி பெற்றுத்தர வேண்டும் என்று ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த தமிழ்நாடு பட்டங்கட்டி கடையர் பேரவை சார்பாக, கிராமத் தலைவர் மற்றும் நிர்வாகத்தினர், சமுதாய நிர்வாகிகள் மற்றும் பெரியோர்கள் இணைந்து ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட கழக செயலாளருமான காதர்பாட்சா முத்துராமலிங்கத்தை நேரில் சந்தித்தனர்.
அப்போது பட்டங்கட்டி கடையர் சமுதாயத்தினர் சாதி சான்றிதழ் பெறுவதில் நீண்ட காலமாக சந்தித்து வரும் சிரமங்களை எடுத்துரைத்து, அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவும், தமிழக முதல்வரை நேரில் சந்தித்து பிரச்சனையை விளக்க அனுமதி பெற்றுத்தரவும், தாங்களும் பரிந்துரை செய்யவும் கோரிக்கை மனு வழங்கினர்.
மனுவை பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர், இந்த பிரச்சனையை முழுமையாக ஆய்வு செய்து தமிழக முதல்வரிடம் எடுத்துரைத்து, பட்டங்கட்டி கடையர் சமுதாயத்தினர் சாதி சான்றிதழ் பெறுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வதாக உறுதி அளித்தார்.
இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ய மண்டபம் ஒன்றியம் கிழக்கு செயலாளர் நிலோபர் கான், மண்டபம் ஒன்றிய கிழக்கு இளைஞரணி துணை அமைப்பாளர் மைக்கேல், தகவல் தொழில்நுட்ப அணி தீபக் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர்.
நிகழ்வில் பட்டங்கட்டி கடையர் கிராமத் தலைவர், நிர்வாகத்தினர், சமுதாய தலைவர்கள் மற்றும் பலர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
– ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர்


