ராமேஸ்வரம், மார்ச் 4:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் லிமிடெட் காரைக்குடி மண்டலம் சார்பில், ராமேஸ்வரம் நகராட்சியில் 12 புதிய அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) பேருந்துகள் இன்று சிறப்பாக தொடங்கி வைக்கப்பட்டன.
“தூய்மை ராமேஸ்வரம்” என்ற நோக்கில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி அறிமுகப்படுத்தப்பட்ட இப்புதிய பேருந்து சேவையை, சிவசங்கர், தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர், கொடி அசைத்து மற்றும் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சிக்கு சிம்ரன் ஜீத் சிங் காலோன், மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையேற்று தலைமை உரையாற்றினார். காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர், வாழ்த்துரை வழங்கினார். நவாஸ் கனி, நாடாளுமன்ற உறுப்பினர், முன்னிலை உரையாற்றினார்.
மேலும், ராமேஸ்வரம் நகர மன்றத் தலைவர் முனைவர் கே.இ. நாசர் கான், துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி, வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் லிமிடெட் நிர்வாக இயக்குனர் தசரதன் அனைவரையும் வரவேற்றார்.
இறுதியில், காரைக்குடி மண்டல பொது மேலாளர் ரவிக்குமார் நன்றி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
புதிய சிஎன்ஜி பேருந்துகள் அறிமுகம் மூலம் எரிபொருள் செலவு குறைப்பு, காற்று மாசு கட்டுப்பாடு மற்றும் பயணிகள் நலன் மேம்பாடு ஆகியவை உறுதி செய்யப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர்



