தமிழர் பெருமையை வெளிக்கொணரும் கல்வெட்டுச் சான்றுகள்

தமிழர் பெருமையை வெளிக்கொணரும் கல்வெட்டுச் சான்றுகள்

சித்தன்னவாசல் சமணர் படுக்கையில் தமிழிக் கல்வெட்டு!

புதுக்கோட்டையில் வரலாற்று மரபு பயணம் – தமிழர் பெருமையை வெளிக்கொணரும் கல்வெட்டுச் சான்றுகள்

 

புதுக்கோட்டை, அக். 27:

திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர்கள் குழு சார்பில், புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் மலைப்பகுதியில் அமைந்துள்ள சமணர் படுக்கை மற்றும் தமிழிக் கல்வெட்டு குறித்து அறிய மரபு பயணம் மேற்கொள்ளப்பட்டது.

 

இப்பயணத்தில் குழுத் தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார், சங்ககால நாணயங்கள் சேகரிப்பாளர் பாண்டியன், வரலாற்று ஆர்வலர்கள் முகமது சுபேர், சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன், மற்றும் வரலாற்றாசிரியர் அரிஸ்டோ வசந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

வரலாற்று சிறப்பு மிக்க சித்தன்னவாசல்

 

திருச்சியிலிருந்து சுமார் 49 கி.மீ தொலைவிலும், புதுக்கோட்டையிலிருந்து 9 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ள சித்தன்னவாசல், தமிழ்நாட்டின் சமண மரபு வரலாற்றில் தனி இடம்பிடித்துள்ளது. மலையின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஏழடிப்பட்டம் குகை, சமணத் துறவிகள் தங்கிய புனித தலமாகப் பார்க்கப்படுகிறது.

 

மலையை ஏறிச் சென்றவுடன் பாறைகளில் செதுக்கப்பட்ட 17 சமணர் படுக்கைகள் கண்ணில் பட்டவுடன், அந்தக் கால துறவிகளின் துறவற வாழ்வை உணர முடிகிறது. படுக்கைகளின் சிலவற்றின் பக்கங்களில் தமிழிக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.

கி.மு 2ஆம் நூற்றாண்டு தமிழெழுத்து

இங்குள்ள கல்வெட்டுகள் கி.மு 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி எழுத்தில் பொறிக்கப்பட்டவை. அவற்றில் ஒன்று குறிப்பிடுவது:

“எருமி நாடு குமுழூர் பிறந்த காவுடி ஈதென்கு சிறுபோசில் இளயர் செய்த அதிட்டானம்.”

இதன் பொருள் — எருமி நாட்டின் (இன்றைய மைசூர்) குமுழூரைச் சேர்ந்த காவுதிக்குச் சிறுபோசில் இளயர் என்ற வீரர் இந்தப் படுக்கையை அமைத்துத் தந்தார் எனப் பொருள் கொள்ளப்படுகிறது.

‘காவுதி’ என்பது சமண, புத்த மதப் பெண் துறவியைக் குறிக்கிறது;

‘இளயர்’ என்பது பழந்தமிழ் போர்வீரர் இனத்தைக் குறிக்கிறது.

இத்தகைய கல்வெட்டுச் சான்று, கர்நாடகா – தமிழ்நாடு வரலாற்றுத் தொடர்பை வெளிப்படுத்தும் முக்கிய ஆதாரமாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஓவியங்கள் மற்றும் தொல்லியல் சிறப்புகள்

 

குகையின் மேற்பகுதியில் சமணர்கள் மூலிகை வண்ணங்களைக் கொண்டு வரைந்த பழமையான ஓவியங்கள் காணப்படுகின்றன. தொல்லியல் நிபுணர்கள் கூறுவதற்கு, இவை இந்தியாவில் உயிர்ப்புடன் தங்கியுள்ள சில முதன்மை முரல் ஓவியங்களில் ஒன்றாகும்.

 

இன்றைய சித்தன்னவாசல் – சுற்றுலா தலம்

இன்றைய தினத்தில் சித்தன்னவாசல் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு சிறுவர் பூங்கா, தமிழன்னை சிலை, மகாவீரர் சிலைகள், இசை நீரூற்று, மேலும் 3 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட செயற்கைக் குளம் மற்றும் படகுச்சவாரி வசதி உள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் இத்தலத்திற்குள் நுழைவதற்குச் சுற்றுலா துறை சார்பில் ரூ. 25 வசூலிக்கப்படுகிறது.

குகை மற்றும் ஓவியங்களைப் பார்க்கத் தொல்லியல் துறை தனியாக கட்டணம் வசூலிக்கிறது.

ஓவியங்களின் தனித்துவம் கருதி புகைப்படம் எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

மலையேற்றம் செய்யப் போகும் சுற்றுலாப் பயணிகள் காலை அல்லது மாலை நேரத்தை தேர்வு செய்வது சிறந்தது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சித்தன்னவாசல் – தமிழர் வரலாற்றின், சமண மரபின், மற்றும் கலாசார ஒற்றுமையின் மௌனச் சாட்சி என வரலாற்று ஆர்வலர்கள் பெருமையுடன் கூறுகின்றனர்.

 

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook