தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கை உயர்வு – 2018ஐ விட 2024ல் 1.50 லட்சம் பேர் கூடுதலாக உயிரிழப்பு
சென்னை: மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்பட்டிருந்தாலும், தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழக அரசு பொது சுகாதாரத் துறையின் பிறப்பு–இறப்பு பதிவு இணையதளத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, 2018ஆம் ஆண்டு மாநிலத்தில் 5,45,255 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், 2024ஆம் ஆண்டில் இது 6,95,680 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, 2018ஐ விட 2024இல் 1,50,426 பேர் கூடுதலாக இறந்துள்ளனர்.
கொரோனா காலமாகிய 2021, 2022 ஆண்டுகளில் மரண எண்ணிக்கை திடீரென அதிகரித்தது. 2021இல் மட்டும் 8,74,977 பேர் உயிரிழந்துள்ளனர். 2022இலும் 6,84,989 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆண்டு வாரியாக மரண விவரம்:
2018 – 5,45,255
2019 – 6,33,640
2021* – 8,74,977
2022* – 6,84,989
2023 – 6,96,106
2024 – 6,95,680
(*2021, 2022 ஆண்டுகளில் கொரோனா காரணமாக இறப்பு எண்ணிக்கை அதிகரித்தது.)
நிபுணர்கள் கூறுவதாவது, “கொரோனாவுக்கு பின் இறப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் முதியோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், இளம் மற்றும் நடுத்தர வயதினரின் மரணங்களும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது” என தெரிவித்துள்ளனர்.
விபத்துகளில் அதிக மரணம்
நமது நாட்டில் விபத்துகள் மூலம் உயிரிழப்போர் எண்ணிக்கை உத்தரப் பிரதேசத்தில் அதிகமாக உள்ளதுடன், அதற்கு அடுத்தபடியாக தமிழகமே அதிக உயிரிழப்புகள் பதிவாகும் மாநிலமாக உள்ளது. விபத்துகளுக்கான முக்கிய காரணங்களில் போதைப் பழக்கம் ஒன்றாகக் கூறப்படுகிறது. இதனால் கல்லீரல் உள்ளிட்ட பல்வேறு உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு மரணிக்கும் நிலையும் அதிகரித்து வருகிறது.
மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை
கரூர் உள்ளிட்ட பல அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நரம்பியல், இதய நோய் போன்ற அவசர சிகிச்சை பிரிவுகளில் டாக்டர்கள் குறைவாக உள்ளனர். பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு டாக்டர் மட்டுமே பணியாற்றி வருவதால், 24 மணி நேர அவசர சிகிச்சை, பிரசவ சிகிச்சை, விபத்து சிகிச்சை, பிரேத பரிசோதனை போன்ற பணிகளில் சிரமம் ஏற்படுகிறது.
இதனால், சிகிச்சை தாமதமடைந்து ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். இறப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இதற்கான காரணங்களை விரிவாக ஆராய வேண்டியது அவசியமாக உள்ளது.

