சென்னை, ஏப். 3: சென்னை தேனாம்பேட்டையில் தொழிலதிபர் தாராசந்த் என்பவருக்குச் சொந்தமான ரூ.5 கோடி மதிப்புள்ள 1,262 சதுரடி நிலத்தை போலி ஆவணங்கள் மற்றும் ஆள்மாறாட்டம் மூலம் அபகரித்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
இந்த மோசடியில், தொழிலதிபரின் தாயாரைப் போன்ற ஒரு பெண்ணைக் கொண்டு ஆள்மாறாட்டம் செய்து நிலத்தை அபகரித்ததுடன், அந்தப் பத்திரத்தை வங்கியில் அடமானம் வைத்து ரூ.3.03 கோடி கடன் பெற்று ஏமாற்றியுள்ளனர்.
வங்கி அதிகாரிகள் மூலம் இது தெரியவர, தாராசந்த் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் (60) மற்றும் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கலைச்செல்வி (59) ஆகியோர் இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டது உறுதியானது.
இதையடுத்து, 2024 ஏப்ரல் மாதம் கலைச்செல்வி கைது செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி ஸ்ரீதரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். கைதான ஸ்ரீதர் மீது ஏற்கனவே பல நில மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

