புதுக்கோட்டை, ஏப்.4:
ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையான வாக்குரிமையை பணம் மற்றும் பொருளுக்காக விற்காமல் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில், மக்கள் சக்தி இயக்கம் திருச்சி மாவட்டம் சார்பில் புதுக்கோட்டை மூன்றாவது தெரு பேருந்து நிறுத்தம் பகுதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை உணர்ந்து நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. “எனது வாக்கு எனது உரிமை”, “என் வாக்கு விற்பனைக்கு இல்லை”, “வாக்களிக்கும் கடமை ஆற்றுவோம்”, “பணத்துக்கு வாக்களிக்கும் மடைமை மாற்றுவோம்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை மாவட்ட மக்கள் சக்தி இயக்க நிர்வாகி அசோகன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில பொருளாளர் க.சி. நீலமேகம் தலைமை வகித்து பேசியபோது,
“யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள். ஆனால் பணமோ, பொருளோ வாங்கிக் கொண்டு வாக்களிக்காதீர்கள். அது ஊழலுக்கு துணைபோகும் செயலாகும். மேலும், ஊழல் பணத்தில் பங்கு பெறும் குற்றத்துக்கு உடந்தையாக இருப்பதற்கு சமமானதாகும்” என்று எடுத்துரைத்தார்.
இதில் மாநில துணைத்தலைவர் வெ.இரா. சந்திரசேகர், துணைச்செயலாளர் ஆர். இளங்கோ, தண்ணீர் அமைப்பு இணைச் செயலாளர் ஆர்.கே. ராஜா, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் பெ. விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
வாக்கு ஒரு உரிமை மட்டுமல்ல – அது நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பொறுப்பும் ஆகும் என பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டது.

