சென்னை: வடசென்னையில் உள்ள ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல குடியிருப்பு பகுதிகளில் சிறுவர்கள் “ப்ரீ பையர்” எனப்படும் ஆன்லைன் கேமை விளையாடும் போது, மிகவும் கொச்சையான மற்றும் ஆபாசமான வார்த்தைகளை உரக்கப் பயன்படுத்தி பேசும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, பள்ளி வயதுடைய சிறுவர்கள் குழுக்களாகச் சேர்ந்து மொபைல் போன்களில் இந்த கேமை விளையாடும்போது, அதில் பயன்படுத்தப்படும் ஆபாசமான மற்றும் அருவருப்பான சொற்களை வெளிப்படையாகப் பேசுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனால் அப்பகுதியில் வழியாகச் செல்லும் பெண்கள், சிறுமிகள் மற்றும் குழந்தைகள் மனஅழுத்தத்தையும் சங்கடத்தையும் எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
சில இடங்களில் இந்த சிறுவர்கள் சாலையோரங்களில் அல்லது குடியிருப்பு பகுதிகளின் முன்பாக கூடிக் கொண்டு விளையாடுவதால், பெண்கள் தனியாக நடந்து செல்லும் போது பாதுகாப்பு குறித்த அச்சமும் உருவாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இத்தகைய சூழல் நீடித்தால், அது சமூக ஒழுக்கத்துக்கும், சிறுவர்களின் வளர்ச்சிக்கும் தீய பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கவலையும் எழுந்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர் கூறுகையில்,
“சிறுவர்கள் ஆன்லைன் கேம்களில் மூழ்கி, அதில் வரும் மோசமான மொழிகளை அப்படியே நடைமுறையில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து காவல்துறை துரிதமாக கவனம் செலுத்த வேண்டும்” என தெரிவித்தனர்.
மேலும், குடியிருப்பு பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியை அதிகரித்து, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு எச்சரிக்கை வழங்க வேண்டும் என்றும், பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பொதுமக்களின் நலன் மற்றும் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

