திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிநேரத்தில் மருத்துவர் இல்லாததால், நான்கரை வயது சிறுவன் உயிரிழந்ததாக பரிதாபமான சம்பவம் நடந்துள்ளது.
உடல்நலக் குறைவு ஏற்பட்ட சிறுவனை குடும்பத்தினர் அவசரமாக கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றபோது, அங்கு மருத்துவர் பணியில் இல்லாததாக கூறப்படுகிறது. உடனடி சிகிச்சை கிடைக்காமல் காலதாமதம் ஏற்பட்டதால் சிறுவன் உயிரிழந்ததாக குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கண்ணனூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 18க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஒரே ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மட்டுமே செயல்பட்டு வருகிறது. ஆனால் அவசர நேரங்களில் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பணியில் இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ள பொதுமக்கள், அரசு உடனடியாக விசாரணை நடத்தி பொறுப்புடையவர்களிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,
24 மணி நேரமும் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், இதுபோன்ற துயர சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க கண்ணனூர் அரசு சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ வசதிகளை உடனடியாக ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

