திருவொற்றியூர் பாலகிருஷ்ணா நகர் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில், 36ஆவது ஆண்டு கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமியின் திருக்கல்யாணம் இன்று (நவம்பர் 1) வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருக்கல்யாண வைபவத்தில் திருமண வீட்டாராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. கே. குப்பன் மற்றும் அவரின் குடும்பத்தினர் தலைமையேற்று விழாவை சிறப்பித்தனர். மேலும், ஏழாவது வார்டு மாநகர மன்ற உறுப்பினர் கே. கார்த்திக், பரந்தாமன், காந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவிழா நிகழ்வில், டி.எஸ். ரத்தினவேலு குழுவினர் மங்கள வாத்திய இசையில் தெய்வீக இசையை வழங்கினர். குருக்கள் சங்கர சுப்பிரமணியம் தலைமையில் திருக்கல்யாணம் மிகுந்த ஆன்மிக மரியாதையுடன் நடத்தப்பட்டது.
முன்னதாக, பாலகிருஷ்ணா நகர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ செல்லியம்மன் ஆலயத்திலிருந்து பெண்கள் சீர்வரிசையில் ஊர்வலமாக பங்கேற்று வள்ளி தெய்வானை அம்மனை ஆலயத்திற்கு கொண்டு வந்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பக்தியுடன் கலந்து கொண்டனர்.
விழாவை முன்னிட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை ஸ்ரீ செல்வ விநாயகர் டைல்ஸ் ஏஜென்சி உரிமையாளர் ரவி, பாலகிருஷ்ணா நகர் குடியிருப்பு நலச் சங்க தலைவர் இ. கணேசன், செயலாளர் ஆர். புருஷோத்தமன், பொருளாளர் பி. சீனிவாசன் ஆகியோர் ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தியுள்ளனர்.
பக்தர்கள் திரளாக பங்கேற்று “முருகா! முருகா!” எனக் கோஷமிட்டபடி திருவிழாவை ஆனந்தபூர்வமாகக் கொண்டாடினர்.

திருவொற்றியூர் செய்தியாளர்: கருணாகரன்.


